ஆணாதிக்கம் VS பெண்ணாதிக்கம் கிறிஸ்தவ சிந்தனையில்

ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டுமா?


     இன்றைய முன்னேறிய சமுதாயத்தில் அடிக்கடி எழுந்து அடங்கிப் போகிற காரசாரமானதொரு தலைப்பு ஆணாதிக்கமா? அது அடிமைத்தனம் என்று முழங்குகிற, கொடி பிடிக்கிற பெண் இயக்கங்களையும், இவங்களுக்கு வேறு வேலையில்லை என்று புலம்புகிற ஒரு கூட்டத்தையும் நாம் அடிக்கடி பார்க்கிறோம். வேதாகமம் இந்த இரு கோஷங்களில் எதற்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது. ஒரு சிறிய அலசல்.
  


  பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.ஆதி.2:18

ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.ஆதி2:20

தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.ஆதி2:21௨3

    மேற்கண்ட வசனங்களில் இருந்து நாம் ஒரு சில உண்மைகளை அறிந்து கொள்ளலாம். எல்லாவிதமான மிருகங்களும் முதலிலேயே ஜோடி ஜோடியாக சிருஷ்டிக்கப்பட்டன, ஆனால் ஆதாமுக்கு ஒரு ஏற்ற துணையின் அவசியமும் அவசரமும் புரியவைக்கப்பட்ட பின் தான் ஏவாள் சிருஷ்டிக்கப்பட்டு ஆதாமிடத்தில் கொண்டுவரப்பட்டாள். கவனிக்கவும். ஏவாள் ஆதாமிலிருந்துதான் சிருஷ்டிக்கப்பட்டாள்(ஏனெனில் சிலர் நாங்கள் எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் - நீங்கள் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள். ஆகவே நாங்கள்தான் உங்களைக் காட்டிலும் பெலசாலிகள் என்று கூறுவர்). இருவருமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்- தேவனுடைய கரத்தினால் உருவாக்கப்பட்டவர்கள்.தேவன் ஏவாளை ஆதாமுக்கு ஏற்ற துணையாக இருக்கும் படி உண்டாக்கினார். இது ஆங்கில வேதாகமத்தில் helpmate என்று உள்ளது(பலருக்கு தங்கள் மனைவிகள் hellmate ஆக இருப்பதாக ஒரு உணர்வு). ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும்படி இருவரும் உண்டாக்கப்பட்டார்கள். மீண்டும் கவனிக்கவும். இருவரை ஒருவர் ஆளுவதற்கல்ல - ஒருவருக்கொருவர் உதவுவதற்காகவே உண்டாக்கப்பட்டார்கள்.ஏவாள் மட்டுமல்ல நாம் எல்லாருமே ஒருவருக்கொருவர் உதவுவதற்குதான் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் வேதாகமத்தில் பல இடங்களில் பெண்கள் ஆண்களைக்காட்டிலும் கீழானாவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்களே என்று நீங்கள் நினைக்கக் கூடும். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்து விட முடியாது.
 
 ஆதி மனிதன் பாவம் செய்தபோது அவர்கள் சபிக்கப்பட்டார்கள்.அவர்களை தேவன் சபிக்கும் போது வேறு வேறு வார்த்தைகளால் சபித்தார். முதலில் பாவம் செய்தது,ஏமாந்தது ஏவாள்தான் என்பது நாம் எல்லாருக்குமே தெரியும். ஆனால் அப்பாவத்தை ஆண்டவர் ஆதாமிடம்தான் கேட்டார். ஏனெனில் ஆதாமே ஏவாளுக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் ஏவாளுக்கு ஆதாம் தான் பாதுகாப்பு கொடுத்திருக்கவேண்டும். ஏவாள் அவசரப்பட்டு பாவம் செய்தாலும் அவன் அதைக் கண்டிக்காமல் ஏவாளின் மேல் உள்ள பிரியத்தினால் அதை வாங்கிப் புசித்தான் என்று வேதவல்லுனர்கள் கூறுகின்றனர்.
 

      சரி காரியத்திற்கு வருவோம். நான் ஏற்கெனவே கூறியபடி எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்து விட முடியாது. ஆகவே தேவன் பெண்களுக்கு சில காரியங்களை விலக்கிவைத்திருந்தார். மேலும் வேதாகமக் காலத்தில் தேவனை அறியாத புறவினத்தவர் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டுமல்ல - அவர்களை தங்கள் விருப்பப்படி கிட்டத்தட்ட ஒரு விலங்குபோலத்தான் நடத்தினர்.ஆனால் வேதாகமப்பெண்கள் தங்கள் புருஷர்களால் நேசிக்கப்பட்டனர், அவர்கள் விரும்புவதை செய்யும் சுதந்திரம் பெற்றிருந்தனர். அதேவேளையில் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
 

    பெண்கள் சபைகளில் பேசக்கூடாது என்று பவுல் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்வி பலருக்கு உண்டு.வேதாகமத்தில் மிரியம் தீர்க்கதரிசி முதற்கொண்டு பல பெண் ஊழியர்களை தேவன் அனுமதித்திருக்கிறார். பல பெண்கள் வல்லமையான ஊழியம் செய்திருக்கின்றனர். தேவன் அவற்றையெல்லாம் ஒருபோதும் தடைசெய்யவில்லை. எந்த ஆணும் அதற்கு எதிராகவும் இருக்கவில்லை. இயேசுவுடன் கூட பல பெண்கள் ஊழியம் செய்தனர்(லூக்கா 8:3).
 
புதிய ஏற்பாட்டு சபைகளிலும் பல பெண் ஊழியர்கள் இருந்தனர். இதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள்ளன. பின்னர் ஏன் பவுல் அவ்வாறு கூறவேண்டும்? பெண்களின் பேச்சு நாம் எல்லாரும் அறிந்ததே. சபையில் பேசும் போது நிதானத்துடன் பேசுவது மிகவும் அவசியமாகும். மிகவும் முதிர்ச்சி பெற்ற பெண்களும் கூட பேசும் போது நிதானம் தவறுகிறதை நான் கண்டிருக்கிறேன். நாம் சபையில் பேசும் போது மனிதர் முன்பு அல்ல - தேவனுக்கு முன்பாக பேசுகிறோம். ஆக்வே அதில் ஒரு ஒழுங்கு இருப்பது நல்லது என்பதற்காக பவுல் அவ்வாறு கூறியிருக்கக்கூடும். ஆனால் இன்று பின்மாரி அபிசேகத்தில் தேவன் ஜாய்ஸ்மேயர் போன்ற பலரையும் போதிக்கும் ஊழியத்தில் ஆண்களைக் காட்டிலும் சிறப்பாக பயன்படுத்துகிறார் என்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. பலர் பேசும் வேகத்துக்கு நம்மல் ஈடு கொடுக்க முடிவதில்லை(இது குறையா? அல்லது நிறையா?).வேதாகமம் நமக்கு போதிக்கும் மிகப்பெரிய நடைமுறை உண்மை என்னவெனில்," சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது." காரியம் என்னவெனில் யார் பெரியவர் என்பதல்ல நாம் என்ன செய்கிறோம்,எப்படி செய்கிறோம் என்பதே.
 

    சும்மா வழ வழவென்று பேசாமல் கேள்விக்கு வாங்க என்ற உங்கள் குரல் கேட்கிறது. வேதாகமம் கூறுவது ஆணாதிக்கமா? அல்லது பெண்ணாதிக்கமா? என்று பட்டிமன்ற கேள்வி கேட்டால் உங்கள் கேள்வியே தவறு என்று நான் கூறுவேன். ஏனெனில் வேதாகமத்தில் முழுக்க முழுக்க தேவனுடைய ஆதிக்கமே!வேதாகமத்தில் ஆணாதிக்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது பெண்ணாதிக்கத்திற்கு ஆதரவாகவோ ஒரு இடத்திலும் கூறப்படவில்லை.
 
வேதாகமத்தில் பெண்கள் எல்லா ஆண்களுக்குமல்ல தங்கள் புருஷர்களுக்குத்தான் கீழ்ப்படிந்து(அது அடிமைத்தனமல்ல- அன்பு) இருக்கும் படி போதிக்கப்பட்டனர்(1பேதுரு 3:5 ).
 
ஆண்கள் தங்கள் மனைவிகளிடத்தில் அன்பு கூறவேண்டுமென (ஆதிக்கம் செலுத்த அல்ல)கட்டளையிடப்பட்டிருந்தனர். தேவன் குடும்பத்தை சபைக்கு ஒப்புமையாக கூறுகிறார். சபைக்கு தலை கிறிஸ்து. அது போல ஒரு குடும்பத்துக்கு தலை புருஷன். நல்ல மனைவி வீட்டை கட்டுகிறாள்.அது கட்டிடம் அல்ல - உறவுகள்.
 
தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்(1கொரிந்தியர்14:33).
 
 
அற்புதம்