எது வேண்டும்? (பாக‌ம்‍‍ 1) நீங்கள் யோசிக்கவேண்டிய கேள்வி

வரமா? அன்பா? எது வேண்டும்? (பாக‌ம்‍‍ 1)
 
 
 
கிறிஸ்துவுக்காக எதையாவது சாதித்து விட வேண்டும் என்று துடியாய் துடிக்கும் இளைஞர்  கூட்டங்கள் இன்று எங்கும் எழும்பி வருகிறதை காணமுடிகிறது.  ஆனால் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லையென்றால் எடுத்த பிரயாசம் எல்லாம் வீணாய் போய் விடுவதோடு கர்த்தருடைய நாமத்திற்கும் மகிமையை கொண்டு வராது.  போட்டித்தேர்வில் குறிப்பாக Bank examination எழுபவர்களுக்கு இப்படியாய் அறிவுரை கூறுவது வழக்கம் "Speed and accuracy is essential for the success in the Bank examination".    கேட்கப்பட்ட வினாக்களுக்கு நேரமெடுத்து விடை எழுதினால்  விடைகள் சரியாக இருக்கும் ஆனால் அனைத்துக் கேள்விகளையும் எழுதி முடிக்க முடியாது.  அதிவேகமாக கேள்விகளுக்கு பதிலளித்து விடைகள் தவறு என்றால் அதுவும் பிரயோஜனமில்லை.  எனவே வேகமாகவும் எழுத வேண்டும் அதே நேரத்தில் விடைகள் சரியாகவும் இருக்க வேண்டும்.  இதைப்போலவே கடைசி காலத்தின் கடைசி நேரத்தில் ஊழியஞ்செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஆவியின் வல்லமையைக் கொண்டு துரிதமாய் அதே நேரத்தில் விவேகமாய் ஒரு கூட்ட ஜனத்தை தேவராஜ்யத்திற்கு சேர்க்க வேண்டும்.

இன்று ஆவிக்குரிய சபைகள் என்று சொல்லி வரங்களை அதிகமாய் போதித்து ஆவியின் கனிகளை அசட்டை பண்ணுவதும் அன்பே எல்லாம், கடவுள் அன்பாகவே இருக்கிறார் என்று உதட்டளவில் பேசி வரங்கள் என்றாலே பாவம் என்று சொல்லி வரங்களைப் பற்றி பேசாத சபைகளும் உண்டு.  அன்பு என்றால் அது ஆவியின் கனிகளில் ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  உண்மையான அன்பு தேவனை நேசிக்கும் அன்பு.  அந்த அன்பின் வெளிப்பாட்டால் தான் அன்னை தெரெசா,  யாரென்று தெரியாதவர்கள் மீதும் கைவிடப்பட்டவர்கள் மீதும் கொண்ட அன்பினால் தன் சொந்த நாட்டை விட்டு வெளிவரச் செய்தது.  தன் வாழ்க்கையை சேவைக்காக அர்ப்பணிக்க செய்தது தன் நாட்டை விட்டு வந்த அவர்கள் தன் பெற்றோரைக் கூட கல்லறையில் தான் காணச் செய்ததது என்றால்  அது கண்டிப்பாக மாம்சத்திலிருந்து வந்த அன்பு அல்ல அது தேவனிடத்திலிருந்து வந்த பரிசுத்தஅன்பே.
 
 இன்றும் தன் பிள்ளை பிழைக்க வேண்டும் என்பதற்காக தன் கிட்னியை மகளுக்கு தந்து தன்னுயிரை இழக்கவும் தயாராக உள்ள தகப்பன்மார்கள் உணடு.  தன் சொந்த தாலியை விற்று மகளுக்கு மணமுடித்த தாய்மார்கள் உண்டு.  தன் பிள்ளைக்காக கணவன் எவ்வளவோ கொடுமைப்படுத்தியும் சகிக்கிற மனைவியர் உண்டு.  மனைவியின் நடத்தை சரியில்லையென்று அறிந்தும் தன் மகளின் வாழ்க்கைப் பாதிக்கப்படுமே என்று பொறுமையாய் செல்லும் கணவன்மார் உண்டு.  அண்ணனை வெட்டுவதற்கு விரட்டின போது கூட இருந்தவர்கள் கூட்டமாய் ஓடின போதும் அண்ணனுக்காக தன் உயிரையும் சேர்த்து ஈந்த தம்பியர்கள் உண்டு.  இவையெல்லாம் அன்புதான் இதை இரத்தப் பாசம் என்கிறோம் சுபாவ அன்பு என்கிறோம்.

 ஆனால் கிறிஸ்துவின் அன்பு இதையும் தாண்டி மேலானது.  பாவிகளுக்காக தன் சொந்த குமாரனையே (இயேசு கிறிஸ்துவையே) பலி கொடுத்த பாவத்தைப் பாராத சுத்த கண்ணனுடையதல்லவா.  என் தம்பிக்காக நான் உதவி செய்யலாம் ஆனால் யாரோ ஒருவருக்கு என்னால் எப்படி உதவி செய்ய முடியும் என்று சொல்லும் நபர்கள் மத்தியில், முழுவதும் பாவத்தில் இருக்கிறவர்களுக்காக பாவமே அறியாத தன் சொந்த குமாரனை பலியிட்ட இந்த தேவனின் அன்பை தியானிக்கும் போது புறப்படுகிற மனுஷனுடைய அன்பு அது  அதிக வல்லமையுள்ளதாய் மாறிவிடுகிறது.  அந்த அன்பு தன் சுகத்தை பார்ப்பதில்லை. தனக்கானவகளை நோக்குவதில்லை.

 இப்படிப்பட்ட அன்பையே தேவன் விரும்புகிறாரே தவிர சபையில் அலங்காரமாய் அன்பைப் பற்றி பிரசங்கம் பண்ணிவிட்டு சுபாவஅன்பு கூட இல்லாமல் பிரசங்க பீடத்தை விட்டு இறங்கும் உதட்டளவு அன்பில் தேவன் பிரியப்படுவதில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  அன்பு வாழ்க்கையில் இருக்கிறதேயல்லாமல் வாயிலில்லை.

 அப்படியானால் இந்த அன்பையே தியானித்து கிறிஸ்துவின் அன்பிலே என் வாழ்க்கையை ஓட்டி விடுகிறேன்.  வரம் செயல்பட்டால் ஊழியம் செய்ய வேண்டும்  அப்படி ஊழியம் செய்தாலும் கண்டவர்களெல்லாம் கண்ணியமற்று பேசி மனமுடையப்பண்ணுவார்கள், வரம் செயல்பட்டால் தேவனுக்கும் கணக்கு கொடுக்க வேண்டும்.  ஒரு தாலந்தாவது வைத்திருந்தால் தானே கணக்கு கேட்பார் தாலந்தே கையிலில்லை என்று கைவிரித்து விட்டால் நல்லது என்று எண்ணுவாரும் உண்டு .  ஆனால் கிறிஸ்துவை நேசிக்கும் உன‌க்கு ஒரு வரத்தை கொடுத்து அதன் மூலம் தேவராஜ்யத்திற்கு மக்களை தகுதியாக்கி ஞானவானாய் நடந்து கொள் என்று கர்த்தர் சொல்லும் போது மனுஷன் என்ன நினைபான் என்று கைகளை கட்டிக் கொண்டு கர்த்தர் தரும் வரங்களை  அசட்டை செய்யலாமா? கூடாதல்லவா


பரிசுத்த பவுல் அடிகளார் சொல்லுவது போல் " கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது"  என்பது போல கிறிஸ்துவின் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடு தான் ஆவிக்குரிய வரம் என்பதை உணர்ந்து கொண்டால் ஒரு தேவபிள்ளையால் ஊழீயஞ்செய்யமாமல் இருக்க முடியாது.  அதாவது  தேவனின் மீது அன்பு கொண்டுள்ள  அவருடைய வல்லமையை உணர்ந்த ஒருவன் பாவத்தின் பிடியில் வாடுகிற, நோயினால் வருந்துகிற ஒரு மனுஷனை பார்க்கும் போது ஐயோ இந்த மனுஷன் தேவனை அறிந்து கொண்டால் நலமாயிருக்குமே, தேவன் அவருக்கு சுகம் கொடுப்பாரே என்றெண்ணி ஏங்குகிற மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வல்லமை தான் வரங்கள்.  அவனுக்காக பரிதபிக்கிற தேவமனுஷன்,  தேவ அன்பினால் உந்தப்பட்டு தேவ வல்லமையை பயன்படுத்துவதையே ஊழியம் என்கிறோம். இந்த வல்லமையை வரம் என்று சொல்கிறோம்.

 வறுமயின் பிடியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் ஒரு பணக்காரரின் வீட்டின் முன் அமர்ந்திருந்து பிச்சை கேட்பது வழக்கமாயிருந்தது.  இந்தப் பணக்காரர் காரில் செல்லும் போதெல்லாம் வறியவனைப் பார்ப்பார்.  சில நேரங்களில் அந்த மனிதன் தெருவில் கிடக்கும் குப்பையெல்லாம் பெருக்கி சுத்தம் செய்வான்.  சில நேரங்களில் பள்ளிப் பிள்ளைகள் தெருவில் செல்லும் போது கார்கள் வரும் போது அந்தப் பிள்ளைகளை ஓரமாய் ஒதுக்கி கார் சென்ற பின் அனுப்புவான்.  இப்படி செய்வதையெல்லாம் பார்த்த அந்த பணக்காரர் அவனுக்கு மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்து தன் வீட்டில் வெளியில் உள்ள தோட்டத்தை பராமரித்து அதிலே ஒரு குடிசை அமைத்து படுத்துக் கொள்ள‌ செய்தார்.  அந்த வறியவனுக்கு மிகவும் சந்தோஷம் பிச்சைக்காரனாய் இருந்த என்னை மூன்று வேளை சாப்பாடும் போட்டு தங்க இடமும் தந்திருக்கிறாரே என ஒரே சந்தோஷம் அவனுடைய உண்மையைக் கண்ட பணக்காரர் அவனை தன் வீட்டிலே ஒரு அறை கொடுத்து வீட்டு சமையல் மற்றும் எல்லாவேலையையும் கொடுத்தார்.  நாளடைவில் வியாபாரத்திற்காக குடும்பமாய் வெளியில் செல்லும் போது அவனிடத்தில் வீட்டுச் சாவியை கொடுத்து விட்டு செல்லுமளவிற்கு உயர்ந்து விட்டான்.

இப்படி ஒரு நாள் சென்றிருக்கும் போது அந்த வேலையாள் பங்களாவுக்கு வெளியில் வந்த‌ ஒரு பிச்சைக்காரன் கிழிந்த சட்டையுடன் செல்வதைப்பார்த்து அவனுக்கு கண்ணீர் வந்தது. தானும் இப்படியே இருந்தது நினைவுக்கு வந்தது ஓடிப்போய் தன்னிடத்தில் இருந்த நல்ல துணிமணிகளை  அவனுககு கொடுத்து சாப்பாடும் கொடுத்தனுப்பினான்.   இப்படியிருந்த அவன்
நாளடைவில் அந்த முதலாளியின் தொழிலில் அவருக்கு அடுத்த இடத்திலேயே உயர்த்தப்பட்டு விட்டான் பாருங்கள்.

 இது போலத்தான் ஆண்டவரும் தன் சமாதானத்தை இழந்து நிற்கதியாய் இருக்கும் ஒருவனுக்கு தன் ஜீவனை கொடுத்து அவனை இரட்சித்தார்.  இரட்சிக்கப்பட்ட அவனிடத்தில் சிறு சிறு பொறுப்புகளை கொடுத்த அவர், அவனின் உண்மையைப் பார்த்து மகிமையாய் தன்னுடனேயே உட்காரச் செய்யப் போகிறார் என்றால் எவ்வளவு ஆச்சரியமாய் இருக்கிறது. இது போலத்தான் கிறிஸ்துவின் அன்பினால் ரட்சிக்கப்பட்ட மனிதன் தன்னைப் போல கஷ்டப்படும் ஜனங்களை கிறிஸ்துவண்டை கொண்டு வர வேண்டும் என விரும்பும் மனிதனின் அன்பைக் கண்டு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வரங்களை கொடுத்தார்.

வரங்கள் செயல்படுவதற்கும் செயல்படும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
வரங்களைப் பயன்படுத்தும் மனிதனிடத்தில் காணப்படும் ஆவியின் கனிகளுக்கு பரலோகத்தில் கொடுக்கப்படும் கனமென்ன அடுத்த பதிவில் பார்க்கலாம்