ஆபிரகாம் பண்டிதர் (1859-1919)


தஞ்சையில் வாழ்ந்த,ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும்.
தமிழிசை ஆர்வலர், ஆய்வாளர், அமைப்பாளர், பயிற்றுனர் என தமிழிசை சார்ந்தவற்றில் நீங்கா இடம் கொண்டோர் பண்டிதர் ஆபிரகாம் அவர்கள்.
தமிழுக்கு தொண்டாற்றிய கிறித்தவர்தம் பட்டியலில் நிலைத்த இடம் பெற்றவர் அன்னார்.
தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, தமிழிசைதான், கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளதை நிருபித்த பல ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலுமாக கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் மிக ஆழமாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் 'கருணாமிர்த சாகரம்'.
'கருணாமிர்த சாகரம்' 1907ல் எழுதப்பட்டது.
ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது 'கருணாமிர்த சாகரம்'. இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வல்லுனர்கள் பற்றி விரிவாகவும் ஆழ்ந்தும் இந்னூலில் அலசியுள்ளார் ஆபிரகாம் பண்டிதர். இசை பற்றிய கலைக்களஞ்சியம் என்றால் மிகையாகாது.

தமிழின் செங்கோட்டி யாழே நவீன கால வீணை என்றும் நிரூபித்தவர் ஆபிரகாம் பண்டிதர் .

தஞ்சையில் லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்தார் அவர். இவருடைய மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தார்.

தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஆபிரகாம் பண்டிதர், ஒரு சித்த வைத்தியருமாவார்.இவர் 1870களில் சுருளிமலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளி மலையில் வசித்த கருணானந்தர் என்ற ஞானியிடம் பண்டிதர் மருத்துவ முறைகளையும் மூலிகை இரகசியங்களையும் கற்றறிந்தார்.
1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்திய சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப்புகழ் பெற்றவை. தமிழ் வைத்திய முறையைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக 1909ஆம் ஆண்டு அரசு அவருக்கு 'இராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்கியது.

1907ஆம் ஆண்டு 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற புத்தகத்தைப் பண்டிதர் வெளியிட்டார். தொண்ணூற்றைந்து தமிழ்ப் பாடல்கள் அதிலிருந்தன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார்.

தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின.

டிசம்பர் 14, 1912இல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பைப் பண்டிதர் தோற்று வித்தார். தென்னிந்திய இசை வளர்ச்சியே அதன் குறிக்கோள். இசைப்பள்ளி ஏற்படுத்துதல், இசை ஆராய்ச்சி, இசை பற்றிய சந்தேகங்களைத் தீர்த்தல் என்பன சங்கத்தின் முக்கிய பணிகள்.
தஞ்சாவூரின் திவான், ஆபிரகாம் பண்டிதரின் இசை மாநாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதே பாணியில் அகில இந்திய அளவில் இந்திய இசை பற்றிய மாநாட்டைப் பரோடாவில் கூட்டினார். அதில் பண்டிதர் பங்கேற்றுக் கட்டுரை வாசித்தார்.
தஞ்சையில், ஆபிரகாம் பண்டிதர் சாலை என்று ஒரு சாலை இன்றும் உண்டு.
அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும், பிரசாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது பலரின் ஆதங்கமாகும். இதற்கு காரணம் அவர் கிறித்தவராய் மாறியதால் / (பிறப்பு) ஜாதிய காரணங்களால் என இருவேறு கருத்துக்கள் உண்டு. எது காரணமாயினும் அது அநீதச் செயலே.

1859ஆம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் பண்டிதரின் 150ஆம் பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு 2009ல் வருகிறது. தமிழுலகில் இது நினைவுகூறப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.